போலி என்கவுண்டர் வழக்குகள்: சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக அமித் ஷாவுக்கு விலக்கு
மும்பை: போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே ஷோராபுத்தீன் மற்றும் அவரது மனைவி கவுசர் ஆகியோர் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு முக்கிய சாட்சியாக இருந்த துல்சிராம் பிரஜாபதியும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரும் போலி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த இரு சம்பவங்களிலும் குஜராத்தின் அப்போதைய அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அமித் ஷா, போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 38 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.
இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நீதிமன்ற விசாரணைக்கு அமித்ஷா ஆஜராகாமல் இருந்தார். இதற்கு நீதிபதியாக இருந்த ஜே.டி.உத்பட் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென புனேவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையி தாம் பாரதிய தேசிய தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய தலைவர்களை அடிக்கடி சந்தித்து பேச வேண்டி இருப்பதால் இந்த வழக்கில் நேரில் ஆஜராக தனக்கு விலக்கு அளிக்குமாறு அமித் ஷா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமித் ஷா தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போலி என்கவுண்டர் வழக்கில் அவர் நேரில் ஆஜராக விலக்கி அளித்தார்.
இதனிடையே அமித்ஷா உள்ளிட்டோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று ஷோராபுத்தீனின் சகோதரர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.