கலாநிதி, தயாநிதிக்கு எதிரான வழக்கில் எப்.ஐ.ஆர் சொல்வது என்ன?
டெல்லி: சன்டைரக்ட் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி கைமாறியது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்த எப்.ஐ.ஆர் அறிக்கையில் உள்ள தகவல்கள் முக்கியமானவை. இதை வைத்துதான் தற்போது, வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அந்த எப்.ஐ.ஆரிலுள்ள தகவல் வருமாறு: தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில், "ஏர்செல்' நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.
தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, "ஏர்செல்' கம்பெனி சார்பில், அதன் நிறுவனர் சிவசங்கரன், ஏழு தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு லைசென்ஸ் கோரி விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், தயாநிதி மாறனோ, "ஏர்செல்'லுக்கு லைசென்ஸ் ஒதுக்கீடு செய்யாமல், வேண்டுமென்றே காலதாமதம் செய்திருக்கிறார்.
சிவசங்கரனின், "ஏர்செல்' கம்பெனியை தனக்கு வேண்டப்பட்ட, மலேசிய தொழிலதிபரான, ரால்ப் மார்ஷலுடைய, "மேக்சிஸ் கம்யூனிகேஷன்' என்ற கம்பெனிக்கு விற்குமாறு தயாநிதி கூறியுள்ளார். இந்த ரால்ப் மார்ஷல், "அஸ்ட்ரோ ஏசியா' என்ற கம்பெனியின்இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டலுக்கு பயந்து சிவசங்கரன், தன் நிறுவனத்தை, "மேக்சிஸ்' கம்பெனிக்கே விற்றுவிட்டார். கம்பெனி கைமாறியவுடன், "ஏர்செல்' கம்பெனிக்கு, தயாநிதி, காலதாமதம் இன்றி, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ், ஒதுக்கீடு செய்திருக்கிறார். வழக்கு:அதன்பின், "மேக்சிஸ்' கம்பெனி வசம் வந்த, "ஏர்செல்' நிறுவனத்துக்கு தன் செல்வாக்கை பயன்படுத்தி, சலுகைகளை தயாநிதி வழங்கியிருக்கிறார்.
தயாநிதி செய்த அனைத்து உதவிகளுக்கும் கைமாறாக, ரால்ப் மார்ஷலின், "அஸ்ட்ரோ ஏசியா' நிறுவனம், "சன் டைரக்ட்' நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. சன் "டிவி'யின் பங்குகளை, "அஸ்ட்ரோ ஏசியா' வாங்கியதில், சட்ட விரோதமாக, 549.96 கோடி ரூபாய், அன்னியச் செலாவணி பணபரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தொகையை ரவுண்ட் செய்து ரூ.550 கோடி முறைகேடு என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிவருகிறது.