ரூ10 லட்சம் லஞ்சம் வாங்கிய போது சிக்கினார் நரேந்திர மோடியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்!
போபால்: பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய பிரதேச தலைவர் ஒருவரிடம் ரூ10 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சி.பி.ஐயிடம் சிக்கியிருக்கின்றனர் நரேந்திர மோடியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளரான கணேஷ் மால்வியாவும் அவரது மனைவி பூனம் ராயும்.
கணேஷ் மால்வியா வருமான வரித்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். பாஜகவின் தேர்தல் பிரசார பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் கணேஷ் மால்வியா, மோடியின் தீவிர ஆதரவாளர். மால்வியாவின் மனைவியும் மத்திய அரசு அதிகாரி. மத்திய பிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் கலாசார பிரிவு தலைவராக இருக்கும் பதோரியா என்பவர் தமது கட்டுமான நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை சரி செய்ய உதவுமாறு கணேஷ் மால்வியாவிடம் கேட்டிருக்கிறார்.
இதை தாங்கள் செய்து தருவதாகவும் அதற்காக ரூ25 லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் கணேஷ் மால்வியாவும் அவரது மனைவி பூனம் ராயும் கேட்டிருக்கின்றனர். சொந்த கட்சிக்காரர்களிடமே லஞ்சம் கேட்கிறார்களே என அதிர்ச்சி அடைந்து போன பதோரியா, சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் நேற்று முன்தினம் லஞ்சமாக ரூ10 லட்சத்தை கணேஷ் மால்வியாவிடம் பதோரியா கொடுத்திருக்கிறார். அப்போது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கணேஷ் மால்வியாவை கைது செய்தனர். அவருடன் மனைவி பூனம் ராயும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிபிஐ அவர்களை தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் மத்திய பிரதேச அரசியல் களத்தில் கடுமையாக எதிரொலித்து வருகிறது. நாட்டின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிற மோடியின் சகாக்களில் ஒருவரே லஞ்சம் வாங்குகிறார் எனில் மோடியால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.