கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த டியூஷன் டீச்சர்
கொல்கத்தா: கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை கண்மூடித்தனமாக அடித்தது தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள லேக் டவுனில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்களின் 3 வயது ஆண் குழந்தைக்கு வீட்டில் டியூஷனுக்கு ஏற்பாடு செய்தனர்.
டியூஷன் எடுக்க கடந்த 15ம் தேதி ஒரு பெண் நியமிக்கப்பட்டார். அவர் குழந்தையை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கதவை பூட்டிவிட்டு குழந்தையை கண்மூடித்தனமாக தினமும் அடித்துள்ளார்.
குழந்தை கதறும் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் கேட்டதற்கு அது எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் குழந்தையை அந்த பெண் அடித்தது பதிவாகியிருந்தது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கேட்டதற்கு போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவரின் கணவர் வந்து போலீசில் புகார் கொடுக்கக் கூடாது என்று குழந்தையின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.