மத்திய அரசு ஊழியர்களுக்கு புது விதி – குடும்பத்தினரின் சொத்துக் கணக்குகளையும் தாக்கல் செய்யனுமாம்!
டெல்லி: மத்திய அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரின் சொத்து கணக்கு விவரங்களையும் இனி ஆண்டுதோரும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறை வெளியாகி உள்ளது.
ஊழல் மற்றும் பண முறைகேடுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு லோக்பால் சட்டத்தைக் கொண்டு வந்தது.
மற்ற கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
மார்ச் மாதம் தாக்கல்:
இந்த விதிமுறைப்படி மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள சொத்து விபரங்களை ஆண்டுதோறும் ஜூலை 31 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய வேண்டும்.
முழுச் சொத்து விவரங்கள்:
அதில் ஒரு ஊழியர் தான் வைத்துள்ள ரொக்கப் பணம்,வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதித் தொகை மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
குடும்பத்தினர் சொத்தும் அடக்கம்:
தனது சொத்து மட்டுமின்றி தன் மனைவி அல்லது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யார், யார் பெயரில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு வாகனங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளதோ அந்த விபரத்தையும் அரசு ஊழியர்கள் எழுதி கொடுக்க வேண்டும்.
புதிதாக வேலைக்கு சேர்பவர்கள்:
இனி புதிதாக வேலைக்கு சேர்பவர்கள், வேலைக்கு சேரும் நாளில் தனக்குள்ள சொத்துக்கள் விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய லோக்பால் சட்ட திருத்தம்:
அரசு ஊழியர்கள் ஏற்கனவே சொத்து விபரத்தை தாக்கல் செய்து வருகிறார்கள். என்றாலும் புதிய லோக்பால் சட்டத்தின் கீழும் அரசு ஊழியர்கள் சொத்து விவரக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பரில் படிவம்:
இந்த நிதி ஆண்டுக்கான சொத்து விவரக்கணக்கு படிவத்தை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.