ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கம்லேஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அதில், நமது நாட்டில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்ப்பது சட்டப்படி குற்றம் அல்ல. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஆபாச இணையதளங்களும் ஒரு காரணம்தான். எனவே இத்தகைய இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, நாட்டில் எண்ணற்ற ஆபாச இணைய தளங்கள் உள்ளன, அது தொடர்பான விவரங்களை தரத் தயார் என வழக்குதாரர் தரப்பில் கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒரு ஆபாச இணையதளம் கூட தடை செய்யப்படவில்லை. இது ஏன்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். மேலும் இத்தகைய இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் 4 வார காலம் அவகாசம் வழங்கினார்கள்.