இந்தியாவில் ஆங்கில செய்தி சேனல்களை பார்ப்போர் வெறும் 0.12% தான்..!!
மும்பை: பொதுவாக செய்தி சேனல்களில் ஹிந்தி,. மராத்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி சேனல்கள் மட்டும் நாட்டில் அதிகம் பேர் விரும்பிப் பார்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் டாப் 10 இடத்தைக் எந்த ஒரு ஆங்கில செய்தி சேனல்களும் கடந்த 3 ஆண்டுகளில் எட்டிக்கூட பிடித்ததில்லை என்கிறது புள்ளி விவரங்கள்.
இந்தியாவில் 135 செய்தி சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானாவை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் முதலீட்டால் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணம் தங்களது அரசியல், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து கொள்ளத்தான் என்பது அப்பட்டமான உண்மை.
டாப் 10ல் ஒரு ஆங்கில செய்தி சேனலும் இல்லை:
கடந்த 3 ஆண்டுகளில் செய்தி சேனல்களின் தரவரிசைப் பட்டியலைப் பார்த்தால் டாப் 10 இடங்களில் எந்த ஒரு ஆங்கில மொழி சேனலும் வந்தது இல்லை.
பொதுவாக தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றைத்தான் அதிகம் பேர் பார்க்கின்றனர். இதற்குத்தான் அதிக ரேட்டிங்கும் கிடைக்கிறது.
சுட்டீஸ்களின் சேனல்களுக்கு இணையாகவே...
செய்தி சேனல்களைப் பொறுத்தவரை குழந்தைகள் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் ரேட்டிங் அளவுதான் கிடைத்து வருகிறது என்கிறது புள்ளி விவரங்கள்.
ஹிந்தி மொழி செய்தி சேனலும் (3.87%) தெலுங்கு மொழி (1.23%) செய்தி சேனலும்தான் கணிசமாக பார்க்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது. அதாவது ஆஜ்தக், ஏபிபி நியூஸ், இந்தியா டிவி ஆகிய ஹிந்தி செய்தி சேனல்கள்தான் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து முதலிடங்களை தக்க வைத்து வருகின்றன.
மராத்தி, தெலுங்கு...
இதற்கு அடுத்த நிலையில்தான் மராத்தி செய்தி சேனல்கள் (0.50%), கன்னடம் (0.40%), பெங்காலி (0.31%) தமிழ் செய்தி சேனல்கள் (0.28%) வருகின்றன. அதாவது ஏபிபி மஜா (மராத்தி) டிவி 9 கர்நாடகா (கன்னட மொழி) , டிவி 9 (தெலுங்கு) ஆகிய பிராந்திய மொழி செய்தி சேனல்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
0.12% பேர் மட்டுமே....
அப்படியானால் ஆங்கில செய்தி சேனல்களை எத்தனை சதவீதம் பேர் பார்க்கிறார்கள்? ஆம் இந்த தேசத்தின் மனசாட்சி.. தேசம் அறிந்து கொள்ள விரும்புகிறது என்று ஏதோ நாட்டின் உச்ச விசாரணை மன்ற அமைப்புகள் போல காட்டு கத்து கத்தும் ஆங்கில செய்தி சேனல்களை 0.08% பேர்தான் என்கின்றன TAM media rating புள்ளி விவரங்கள்.
அதே போல ஆங்கில பிஸினஸ் சேனல்களை பார்ப்போர் 0.03% பேர். இது தவிர பிராந்திய ஆங்கில சேனல்களை பார்ப்போர் 0.01%. ஆக மொத்தம் இந்தியாவில் ஆங்கில செய்திகள்- பிஸினஸ் சேனல்களை பார்ப்போர் வெறும் 0.12% பேர் தான்.
தமிழ் செய்தி சேனல்கள் 0.28%
அதேபோல் வரிந்து கட்டிக் கொண்டு நேருக்கு நேர், விவாத களங்களை பரபரப்பாக மெனக்கெட்டு தமிழ் செய்தி தொலைக்காட்சிகளும் நடத்தினாலும் மொத்தமே 0.28% பேர் பார்க்கின்றனர்..
ஆனால் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் தான் நாட்டையே புரட்டிப் போடுவது மாதிரி கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டுள்ளன... உண்மை நிலையோ, இந்த கூப்பாட்டை நாட்டின் 1 சதவீத மக்கள் கூட கேட்பது இல்லை என்பதே.