ஹரியானா தேர்தலில் 4-வது தலைமுறை- தேவிலாலின் கொள்ளு பேரன் துஷ்யந்த் சிங்கை முதல்வராக்க முயற்சி
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய லோக் தளம் தேவிலாலின் கொள்ளு பேரன் துஷ்யந்த் சிங்கை முதல்வராக்க முயற்சிக்கப்படுகிறது. 4-வது தலைமுறை அரசியல்வாதியான துஷ்யந்த் தற்போது ஹிஸார் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
பஞ்சாபில் இருந்து 1966-ல் பிரிந்த ஹரியானா, குடும்ப அரசியலுக்கு பெயர் போனது. இம் மாநிலத்தை தேவிலால், பன்ஸிலால், பஜன்லால் என 3 லால்-கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்தனர். இதில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது பன்ஸிலால் குடும்பம். இரண்டாவதாக பஜன்லால், மூன்றாவதாக தேவிலால் குடும்பம் ஆட்சி செய்தது.
தேவிலால் கொள்ளு பேரன்
இதில் ஹரியானா முதல்வராகவும் நாட்டின் துணைப் பிரதமராகவும் பதவி வகித்த தேவிலாலின் கொள்ளு பேரன் துஷ்யந்த் சிங். தற்போது எம்.பி.யாக இருக்கும் இவர் ஹரியானா சட்டசபை தேர்தலில் உச்சானா கலன் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜெயிலில் சவுதாலா
தேவிலாலின் மகனும் லோக் தளத்தின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக இருந்தபோது, 1999-ல் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் சிக்கினார். இவ்வழக்கில் தனது மகன் அஜய் சிங் சவுதாலாவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்ததால், அவர்களால் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.
சட்டசபை தேர்தலில் துஷ்யந்த்
இதையடுத்து அஜய் சிங்கின் மகன் துஷ்யந்த் சிங், ஹிஸார் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இந்நிலையில் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது பேரன் துஷ்யந்தை சட்டசபை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார். தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் துஷ்யந்தை அவர் முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வலுவான பாஜக வேட்பாளர்
இவர் போட்டியிடும் உச்சானா கலன் தொகுதி இவரது தாத்தா ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தொகுதியாகும். கடும் போட்டி மிகுந்த இத் தொகுதியில் கடந்த 2009-ல் ஓம் பிரகாஷ் சவுதாலா வெறும் 621 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் சவுத்ரி வீரேந்தர் சிங்கை தோல்வியுறச் செய்தார். இம்முறை, பாஜகவில் இணைந்துவிட்ட வீரேந்தர் சிங் தனது மனைவி பிரேம்லதாவை, துஷ்யந்துக்கு எதிராக நிறுத்தியுள்ளார்.
உறவுகள் போட்டி
அஜய் சிங்கின் தப்வாலி தொகுதியில் அவரது மனைவியும் துஷ்யந்தின் தாயுமான நைனா சிங் போட்டியிடுகிறார். நைனாவை எதிர்த்து அவரது கணவர் அஜய் சிங்கின் தாய் மாமன் டாக்டர் கமல்வீர் சிங், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.