உச்ச நீதிமன்றத்தில் தினமும் 900 கார்கள் – இடநெருக்கடியை குறைக்க விரைவில் ”சைக்கிள்”?
டெல்லி: டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவதால் ஊழியர்கள் சைக்கிள்களை பயன்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார் நீதிபதி ஆர்.எம்.லோதா.
உச்ச நீதிமன்றத்தில் தினமும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போகின்றனர்.
இவர்களில் முக்கால்வாசிப்பேர் கார்களில்தான் வருகின்றார்கள்.
பெருகும் கார்கள்:
நிறுத்துமிடம் இருந்தாலும் நாளுக்கு நாள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கின்றது. இதனால் இட நெருக்கடி ஏற்பட்டு கார் நிறுத்த இடமே இல்லாமல் போகின்றது.
எரிச்சலை ஏற்படுத்தும் நெருக்கடி:
மேலும், மாலையில் அனைவரும் நீதிமன்றம் முடிந்து கிளம்பும்போது போக்குவரத்து நெருக்கடி எரிச்சலை ஏற்படுத்துகின்றது. மேலும், வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போலீசாருக்கு தலைவலியாக உள்ளது.
பொதுநல மனு:
இந்தப் பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு பதிவு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சுற்றுச்சூழல் மாசுபாடு:
இம்மனுவை விசாரித்த நீதிபதி லோதா, "கார்களின் எண்ணிக்கையை ஏன் குறைக்கவில்லை? சுற்றுச்சூழலும் மாசுபடுவது குறையுமே" என்று கேள்வி எழுப்பினார்.
தினசரி 900 கார்கள்:
இதற்கு அரசுத் தரப்பில் "நீதிமன்றத்திற்கு அனைவருமே கார்களில்தான் வருகின்றார்கள். தினமும் 900 கார்கள் நிறுத்தப்படுவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. அவர்களிடம் இதனைக் கூறவும் முடியவில்லை" என்று கூறப்பட்டது.
சைக்கிள்தான் பெஸ்ட்:
இதையடுத்து, "வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் என அனைவரும் சைக்கிளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே என்று கூறிய தலைமை நீதிபதி லோதா இதை அவசர பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.