நிலக்கரி சுரங்க ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் 14வது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது.
அதில், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஐ தமது விசாரணை நிலவர அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் வழக்குகளின் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நிலக்கரி ஒதுக்கீட்டில் கடைப்பிடித்து வரும் கொள்கை குறித்து வரும் 29-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.