நிலக்கரி சுரங்க வழக்கு ஆவணங்கள் இன்று ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் ஒப்படைப்பு!
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க ரவிகாந்த் சர்மா தலைமையில் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் வழக்கைக் கைவிடும் முடிவுக்கு வந்த சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம். லோதா, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையாளர் இந்த வழக்கின் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் 5 நாட்களுக்குள் வழங்கும்படி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது பரிந்துரையை 4 வாரங்களுக்குள் சீலிட்ட உரையில் வைத்து வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிலக்கரி ஒதுக்கீடு வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்று தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் வழங்கப் போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.