''ஆந்திரக் கண்ணா'' 2 லட்டு தின்ன ஆசையா?.. ஆசை காட்டும் மோடி!
நிஜாமாபாத்: மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தால், உங்களின் 2 கைகளிலும் 2 லட்டுகள் கிடைக்கும் என்று ஆந்திராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி பேசினார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடந்த பிரசாரத்தின்போது மோடி பேசியதாவது:
டாக்டர் காங்கிரஸ்...
தெலுங்கானாவை உருவாக்கும் விஷயத்தில் காங்கிரஸ் ஒரு டாக்டரை போல் நடந்து கொண்டது. குழந்தையை பிரசவம் செய்ய வைத்த அது, தெலுங்கு ஆன்மா என்ற தாயை கொன்று விட்டது.
இது தவறு...
குழந்தை பிறப்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும், தாயை கொன்று குழந்தையை பிரசவிக்கக் கூடாது.
இதில் ரகசியமில்லை...
1,100க்கும் மேற்பட்டோர் தங்களுடைய உயிரை மாய்த்து கொண்டதால்தான், தெலங்கானா தனி மாநில கோரிக்கை ஏற்கப்பட்டது. அதற்கு பாஜகவும் உதவி செய்தது. இதில், ரகசியம் என்று எதுவுமே இல்லை.
பொய்...
இம்மாநிலத்தை உருவாக்கியதற்கான பெருமையை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், காங்கிரசும் தட்டிச் செல்ல பார்க்கின்றன. அக்கட்சிகள் பொய் சொல்கின்றன.
வெந்த புண்ணில் வேல்....
இந்த தேர்தலில் மக்கள் தவறான கட்சிகளுக்கு வாக்கு அளிப்பது, 1,100 ஆன்மாக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகி விடும். இவர்களை இழந்து தவிக்கும் தாய்மார்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும்.
வளர்ச்சிப் பாதைக்கு...
பாஜக.வுக்கு வாக்களித்தால், தெலுங்கானாவை மட்டுமின்றி சீமாந்திராவையும் ஒன்று சேர்த்து வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வோம்.
2 லட்டு...
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ.வுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தால், உங்களின் 2 கைகளிலும் 2 லட்டுகள் கிடைக்கும் என்றார் மோடி.