மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்: சோனியா
டெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு முழு அளவில் நெருக்கடி கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
டெல்லியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 70வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. ராஜிவ் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் சோனியா பேசியதாவது:
ராஜிவ் காந்தியின் சிந்தனைகள் எப்போதும் நம்மை வழிநடத்தும். பெண்கள் முன்னேற்றம் என்பது ராஜிவின் கனவு. அவரது முயற்சியால்தான் தேசிய பெண்கள் ஆணையம் அமைக்கப்பட்டது.
பெண்களின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் தலைவர்கள் பாடுபட்டிருக்கின்றனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது ராஜிவ் விருப்பம்.
இன்று நாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் வரை ஓயமாட்டோம். இந்த மசோதாவை கொண்டுவருவதற்காக மத்திய அரசுக்கு முழு அளவில் நெருக்கடி கொடுப்போம்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தம்முடையதாக வெளிப்படுத்துகிறது மோடி அரசு. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பொதுகழிப்பிடங்களை கட்டும் முயற்சியை தொடங்கி வைத்தது காங்கிரஸ்தான். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம். தேர்தல் அரசியலுக்காக காங்கிரஸ் தனது சித்தாந்தத்தை விட்டுக் கொடுக்காது.இவ்வாறு சோனியா பேசினார்.
மகளிர் காங்கிரஸின் சுனாமி
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:கோயில்களில் பெண் தெய்வங்கள் முன்பு மண்டியிட்டு வணங்குகிறோம். பெண்களை சகோதரிகள் என்றும் தாய்மார்கள் என்றும் அழைக்கிறோம்.
ஆனால் அதே மக்கள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
காங்கிரஸ் முக்கிய பொறுப்புகளில் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் முன்னேறினால் அவர்களைச் சுற்றிய ஆண்களின் சிந்தனையும் மாறும்.
காங்கிரஸ் கட்சிக்கு இப்போது மகளிர் காங்கிரஸின் சுனாமி அலைதான் அவசியம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.