மோடியை வெளியேற்ற நினைத்த வாஜ்பாயை மறந்த பாஜக: காங். இணையதளத்தில் பிரசாரம்!!
டெல்லி: நரேந்திர மோடியை வெளியேற்ற வேண்டும் என நினைத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மறந்து போன பாரதிய ஜனதா என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது.
தற்போதைய லோக்சபா தேர்தலில் இணையதளங்கள், சமூக வலைதளங்களும் பிரசாரத்தின் முக்கிய பங்காற்றி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று ஒரு புதிய யுக்தியைக் கையாண்டது.
'ராஜதர்மத்தை நிலைநாட்ட பாரதிய ஜனதாவில் யாரும் இல்லை' என்ற தலைப்பில் பாஜக மூத்த தலைவரும் நாட்டின் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் படத்தைப் போட்டு பதிவு செய்துள்ளதாவது:
அரசியல் ஆதாயத்திற்கு 1998 முதல் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். 2004 வரை காங்கிரஸ் கூட்டணியால் தோல்வி அடையும் வரை அவர் பொறுப்பில் இருந்தார்.
பாரதிய ஜனதாவின் தோல்விக்கு காரணங்களை வாஜ்பாய் முழுமையாக அறிந்து வைத்திருந்தார். குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தை முதல்வர் மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார். இதன் தாக்கமே தமது தோல்விக்கு காரணமாக இருந்தது என்று அறிந்திருந்தார்.
குஜராத் கலவரத்தில் ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவோம் என உணர்ந்தார். அவரை நீக்க வேண்டும் என்று கூட விரும்பினார், வாஜ்பாய் மணாலியில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறுகையில், சிலர் மோடியை நீக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுவே எனது எண்ணமும் கூட என்றார்.
இதனை அவரது அமைச்சரவையில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் கூட ஒப்புக் கொண்டார். மோடி மீது பாரதிய ஜனதா நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வாஜ்பாய் பதவி விலக கூட தயாராக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிக சிறந்த நபர். அவரது சிறப்புக்கு ஏற்ற தலைவர்கள் யாரும் பாரதிய ஜனதாவில் இல்லை.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி உரிய உதவிகள் செய்யவில்லை, முறையான நடவடிக்கை இருக்க வேண்டும் என பல கடிதங்களை வாஜ்பாய் எழுதியிருந்தார். மோடியை வெளியேற்ற வேண்டும் என நினைத்த வாஜ்பாயை பாரதிய ஜனதா தற்போது மறந்து விட்டது.
முதல்வராக இருந்து சரியான பணி செய்யாத நபர் நாட்டின் பிரதமர் வேட்பாளரா? இவரால் நாட்டில் எப்படி நல்ல பிரதமராக செயல்பட முடியும்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த பிரசாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.