காஷ்மீரில் ஏன் ஒரு இந்து முதல்வராக முடியாது? கேட்டது காங்கிரஸ் அமைச்சர்!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறுபான்மை இந்துக்க்ள் ஏன் முதல்வராக முடியாது? என்று காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாம் லால் சர்மா மாநில பொது சுகாதாரத் துறை, பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு துறை அமைச்சராக உள்ளார்.
அம் மாநிலத்தின் அக்னோர் டவுனில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு ஷாம் லால் சர்மா பேசியதாவது:
இந்து மக்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வராக கானிகான் சவுத்ரி இருந்தார். 2 சதவீதம் மட்டும் இஸ்லாமியர்கள் வாழும் மராட்டியத்தில் அப்துல் ரகுமான் அந்துலே முதல்வராக இருந்தார்.
இந்நிலையில் நமது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஒரு இந்து ஏன் மாநில முதல்வராக ஆக முடியாது?
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1947ம் ஆண்டில் இருந்து இஸ்லாமியர் ஒருவரே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
மாநிலத்தில் ஒரு இந்து முதல்வருக்காக நீங்கள் போராட வேண்டும். ஜம்மு பகுதியில் ஒரு பிராந்திய கவுன்சில் உருவாக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்து இந்தியா என்று பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கமும் பேசிவரும் நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே இந்துத்துவா தொனியில் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.