காதல் தகராறு: 2 பெண்களை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த கான்ஸ்டபிள்
ஜம்மு: உயர் அதிகாரியின் மனைவி மற்றும் மைத்துனியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸ் அலுவலர் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் சஞ்சய்குமார். இன்று அதிகாலை 12 மணியளவில், ரஜோரி மாவட்டத்திலுள்ள, சிறப்பு அதிகாரி சமன் லால் என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சஞ்சய்குமார், சமன்லால் மனைவி ஊர்மிள் குமாரி மற்றும் அவரது சகோதரி நிஷா குமாரி ஆகியோரை தனது கையில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
குண்டுகள் பாய்ந்து இருவரும் அதே இடத்தில் பலியாகினர். இதைத்தொடர்ந்து சஞ்சய்குமார் தன்னைத்தான் சுட்டுக்கொன்று ரத்த வெள்ளத்தில் சரிந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு பிற போலீசார் ஓடிவந்து பார்த்தபோது மூவரும் உயிரிழந்துவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். நிஷா குமாரியை, சஞ்சய்குமார் காதலித்ததாகவும், ஆனால் நிஷா குமாரி இந்த இதை ஏற்கவில்லையென்றும் கூறப்படுகிறது. இக்காரணத்தால்தான் நிஷா குமாரி மற்றும் அவரது சகோதரியை கொன்ற சஞ்சய்குமார், போலீசில் சிக்கி தண்டனை அனுபவிக்காமல் இருப்பதற்காக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.