அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க டெல்லி கோர்ட் மறுப்பு!!
டெல்லி: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை விடுவிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்த போது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டுக்காக ரூ200 கோடியை கலைஞர் டிவி ஆதாயமாக பெற்றது என்பது சிபிஐ குற்றச்சாட்டு.
இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி, ரூ200 கோடி ஆதாயமாக பெற்றதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாக கடந்த ஆண்டு கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இக்குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள்,. திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் கோரி அனைவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுக்களை இன்று விசாரித்த நீதிமன்றம் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அப்போது வயோதிகம் காரணமாக ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளதால் வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்திருந்ததார்.
ஆனால், தயாளு அம்மாளை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.