உ.பி.: சகரான்பூரில் கலவரத்தில் 2 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல்
சகரான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் சகரான்பூரில் நிலப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சகரான்பூரில் நிலம் தொடர்பாக இரு குழுவினர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் துப்பாக்கி சூடு நடத்தியும், பல வாகனங்களை எரித்தும் மோதலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் மோதலை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதில் 5 போலீசார் உட்பட 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வியாபாரிகள் சங்க தலைவர் ஹரிஷ் கோச்சார் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். மீண்டும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப்படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. மூத்த போலீஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இதையொட்டி அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதலில் 20க்கும் மேற்பட்ட கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. மோதலில் சம்பந்தப்பட்ட 12க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.