ஒடிசா: நிவாரணம் வேண்டி முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தை மறித்த கிராம மக்கள்
கடந்த சனிக்கிழமையன்று ஒடிசா மாநிலம் கோபால்பூரை 220 கி.மீ. வேகம் வரை தாக்கிய அதிகவேக பாய்லின் புயலுக்கு கிட்டத்தட்ட 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாய்லின் புயலில் சிக்கி ஒடிசாவில் மட்டும் மொத்தம் 12 மாவட்டங்களை சேர்ந்த 14 514 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கனமழையால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயரிடப்பட்டிருந்த ரூ. 2400 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்துள்ள பகுதிகளில் வாழும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு 7 முதல் 14 நாட்கள் உணவு நிவாரண நிதியை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். இந்நிலையில் சேதாரமடைந்த கடலோர மாவட்டங்களை நேரில் கண்டு சேத அளவை பார்வையிட்டு வருகிறார் நவீன் பட்நாயக்.
அந்தவகையில், புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள கஞ்சன் மாவட்டத்தில் உள்ள அகஸ்தினாகான் பகுதியைச் சேர்ந்த மக்கள் 50 பேர் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் வரும் வழியில் மரங்கள், கட்டைகள் போன்றவற்றைப் போட்டு வழி மறித்தனர்.
தங்கள் ஊரில் உள்ள நிவாரண முகாமை முதல்வர் பார்வையிடாமல் செல்ல இருப்பதைக் கண்டித்தே மக்கள் இவ்வாறு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ஆனால், மரங்கள் அகற்றபப்ட்டு முதல்வரின் பயணம் தொடரப்பட்டது.
இதனால், மேலும் ஆத்திரமடைந்த அம்மக்களை எம்.பி சந்த் மஹபத்ரா சந்தித்து அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் அம்மக்களின் கோபம் சற்றுத் தணிந்தது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பார்வையிடச் சென்ற பெரும்பாலான நிவாரண முகாம்களில் மக்கள் போதிய உணவு மற்றும் குடிநீர் இன்றி வாடுவதாக குற்றச்சாட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.