கட்சியிலிருந்து என்னை நீக்கியது நியாயமற்றது... ஜஸ்வந்த் சிங் வேதனை
ஜெய்சல்மார்: தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய முடிவு நியாயமற்றது என்றும், பாரதீய ஜனதாவில் தனிப்பட்ட நபருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்.
பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் பர்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதனை கட்சி மேலிடம் ஏற்கவில்லை.
ஜஸ்வந்த் சிங் விரும்பிய பார்மர் தொகுதிக்கு சோனாராம் ஜவுத்திரியை வேட்பாளராக நிறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஜஸ்வந்த் சிங் தான் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்தார். ஜஸ்வந்த் சிங்கின் இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து பல பாஜக மூத்த தலைவர்கள் அவரை சமாதானப் படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால், சொன்னது படியே பார்மர் தொகுதியில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார் ஜஸ்வந்த் சிங்.
இதனால் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக நேற்று முந்தினம் ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து நீக்கியது பாஜக. கட்சியின் இந்த அறிவிப்பைக் கேட்டு வேதனை தெரிவித்துள்ளார் ஜஸ்வந்த் சிங். கட்சிக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த தம்மை தலைமை நடத்திய விதம் மிகவும் மன வேதனையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங் கூறியதாவது, ‘தனி நபர் துதி பாடல்கள் அரசியல் கட்சிக்கு அழகல்ல. தனிப்பட்ட நபரின் கைபார்வையாக அரசியல் கட்சி ஒருபோதும் மாறிவிடக்கூடாது. ராஜ்நாத் சிங்கின் இந்த முடிவால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும். சொந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய அந்த பகுதியில் போட்டியிட கேட்டும் மறுத்த பாஜகாவின் முடிவு வேதனை ஏற்படுத்திவிட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ‘முகமது அலி ஜின்னா'வைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதற்காக பாஜகவில் இருந்து நீக்கப் பட்டார் ஜஸ்வந்த் சிங். பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் பட்டார். ஆனால், தற்போது இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ள ஜஸ்வந்த் சிங், இம்முறை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து விலக்கி வைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.