சுதந்திர தினத்தையொட்டி 1,250 கைதிகளுக்கான தண்டனை குறைப்பு!
அண்மையில் மத்திய அரசால் டெல்லி சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட அலோக் வர்மா, நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி திகார், ரோகிணி சிறைகளில் உள்ள சுமார் 1,250 கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு அவர்களது தண்டனைக் காலத்தை குறைத்து உத்தரவிட்டார்.
இதன்படி, குறைந்தபட்சம் 15 நாள் முதல் அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைக் கைதிகளின் தண்டனைக் காலத்திலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பவர்களின் நன்னடத்தையைக் கண்டறிந்து அவர்களுக்கு குறைந்தபட்சமாக 15 நாள் வரை தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களின் நன்னடத்தையைக் கண்டறிந்து அவர்களுக்கு 3 மாதங்கள் வரை தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சமீபத்தில்தான் அலோக் வர்மா பிறப்பித்ததாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறையில் உள்ள கைதிகளின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இந்த தண்டனை குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.