தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற டெல்லி வாலிபர் - 10 ஆண்டு சிறை
டெல்லி: தாயின் கள்ளக்காதலனை அடித்துக் கொலை செய்த வழக்கில் டெல்லி வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு டெல்லிக்கு உட்பட்ட பட்லி கால்வாய் பகுதியில் கோணிப்பையில் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப் பட்ட ஆணின் பெயர் குமார் எனத் தெரியவந்தது. மேலும், குமாரின் மனைவி தனது கணவருக்கு அதே பகுதியில் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக போலீசில் தெரிவித்தார்.
அதனடிப்படையில் மேற்கொண்டு விசாரித்த போலீசார் நவீன் என்ற 23 வயது வாலிபரைக் கைது செய்தனர். தனது தாயுடன் தனிமையில் இருந்ததால் ஆத்திரத்தில் குமாரை அடித்துக் கொன்றதாக நவீன் ஒப்புக் கொண்டார்.
மேலும், தனது தாயின் உதவியுடன் குமாரின் உடலை கோணிப்பையில் திணித்து கால்வாயில் வீசியதாகவும் நவீன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நவீனின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இது திட்டமிட்ட கொலை அல்ல. தனது தாயுடன் இன்னொரு ஆடவரை பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த ஆத்திரத்தின் விளைவாக உணர்ச்சிவசப்பட்டு அந்த வாலிபர் இந்த தவறை செய்து விட்டார்' என வாதாடினார்.
இதனையடுத்து, குற்றவாளி நவீனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த கொலையை மறைக்க அவருக்கு உடந்தையாக இருந்த தாயாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.