பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும்: திக்விஜய்சிங்
டெல்லி: ஐ.பி.எல். போட்டிகளின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சுனில் கவாஸ்கரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளதைத் தொடர்ந்து என். சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங்கிள் வீரர்களும் நிர்வாகிகளும் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி முத்கல் தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது.
நீதிபதி முத்கல் கமிட்டியும் 4 மாத காலம் விசாரணை நடத்தி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் ஐ.பி.எல். போட்டிகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் சீனிவாசன் நீடிக்கக் கூடாது; இடைக்கால தலைவராக கவாஸ்கர் நியமனம் என அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது கிரிக்கெட்டின் நலன் கருதி பிறப்பிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு என்றார்.
அதேபோல் முன்னாள் வீரர் சேதன் பகத் கூறுகையில், இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் உச்சநீதிமன்ற நீதிபதிதான் என்றார். கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராஜிவ் சுக்லா கூறுகையில், எந்தத் தரப்பையும் பாதிக்காத தீர்ப்பு இது என்றார்.
சீனிவாசன் ராஜினாமா அவசியம்.. திக்விஜய்சிங்..
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், ஐ.பி.எல். போட்டிகளானது கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு பலன் தரக்கூடியது.
பிக்ஸிங்கில் ஈடுபடும் வீரர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக அந்த அணிகளை தண்டிக்கக் கூடாது. கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் நிச்சயம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.