அஸ்ஸாம் அமைச்சர் திடீர் ராஜினாமா- ராகுலுக்கு எதிராக போர்க்கொடி?
டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி "அதிருப்தி குரல்" என்ற சுனாமியில் சிக்கி தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.. முதல்வர் தருண் கோகய்க்கு எதிராக அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்துள்ளது ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கையாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அப்போதே முதல்வர் தருண் கோகய் மாற்றப்படுவார் எனக் கூறப்பட்டது.
ராகுல் ஆதரவு..
ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவில்தான் தருண் கோகய் முதல்வராக நீடித்து வருகிறார்.
போர்க்கொடி
இந்த நிலையில்தான் இன்று திடீரென அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் 32 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டனர்.
அதிர்ச்சியில் காங்கிரஸ் மேலிடம்
முதல்வர் தருண் கோகயை ராகுல் ஆதரித்து வரும் நிலையில் கோகயின் ராஜினாமாவை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது ராகுல் காந்திக்கு எதிரான போர்க்கொடியாக கூறப்படுகிறது.
ராகுலுக்கு எதிரானது அல்ல..
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் கூறுகையில், ராகுல் காந்திக்கு எதிரான போர்க்கொடியாக பார்க்கவில்லை. பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் தருண் கோகயைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார்.
சட்டசபையில் தனித்து செயல்படுவோம்
ஆனால் ராஜினாமா செய்த அமைச்சர் ஹிமந்த் பிஸ்வாவோ, இனியும் தருண் கோகயின் தலைமையின் கீழ் ஒருபோதும் செயல்பட முடியாது. சட்டசபையில் தனித்தே செயல்படுவோம் என்றார்.