நீதிபதி ஜெ.வுக்கு ஜாமீன் கொடுத்திருக்கலாம், ஆனால் ஏனோ கொடுக்கவில்லை - திமுக வக்கீல்கள் கருத்து
பெங்களூர்: ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கொடுத்திருக்கலாம். அது நீதிபதியின் தனிப்பட்ட உரிமையாகும். ஆனால் இன்று நீதிபதி ரத்னகலா கொடுக்கவில்லை. ஏனோ அவருக்கு தைரியம் இல்லை என்று திமுக தரப்பு வக்கீல்களான பாலாஜி மற்றும் நடேசன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் உள்ளிட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்த 2 நிமிடங்களில் அதிரடியாக விசாரணையை முடித்து விட்டுப் போய் விட்டார் நீதிபதி ரத்னகலா. இது அதிமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நீதிமன்ற விசாரணை தொடங்கியதுமே, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், நீங்கள் உங்களது ஆட்சபனை மனுவை தாக்கல் செய்யவில்லையா என்று கேட்டுள்ளார். அதற்கு பவானி சிங் இதோ தாக்கல் செய்கிறேன் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து வழக்கை ஒத்திவைத்து விட்டு எழுந்து போய் விட்டார் நீதிபதி.
இது அதிமுக தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நீதிபதியின் மின்னல் வேகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திமுக தரப்பு வக்கீல்களே கூட இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சன் செய்தி சானலுக்கு பேட்டி கொடுத்த திமுக தரப்பு வக்கீல்களான பாலாஜி மற்றும் நடேசன் ஆகியோர் கூறுகையில், இன்றைய விசாரணை தொடங்கியதுமே ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்யவில்லையா என்று அரசு வக்கீலிடம் நீதிபதி கேட்டார். அவரும் தாக்கல் செய்வதாக கூறினார். அதைக் கேட்டதும் உடனடியாக ஒத்திவைத்து விட்டு நீதிபதி கிளம்பி விட்டார்.
ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நீதிபதி நினைத்தால் ஜாமீன் கொடுத்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட உரிமைதான். ஆனால் கொடுக்கவில்லை. ஏனோ அவருக்கு தைரியம் இல்லை.
இந்த மனுவை ஒத்திதான் வைத்துள்ளனர். டிஸ்மிஸ் செய்யவில்லை. டிஸ்மிஸ் செய்தால்தான் உச்சநீதிமன்றத்தை மனுதாரர்கள் அனுக முடியும்.
அக்டோபர் 7ம் தேதி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது ஜாமீன் கிடைக்க வாய்ப்புண்டு.
ஒருவேளை மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பை நிறுத்தி வைத்தும், தண்டனையை நிறுத்தி வைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் ஜெயலலிதா உள்ளிட்டோர் அபராதத் தொகையைக் கட்ட வேண்டியிருக்காது என்று அவர்கள் கூறினர்.