உ.பி.: மகளை ஈவ் டீஸிங் செய்தவர்களை தட்டிக்கேட்ட டாக்டரை அடித்துக் கொன்ற 3 சகோதரர்கள்
மீரட்: உத்தர பிரதேசத்தில் மகளிடம் வம்பு செய்த நபர்களை தட்டிக் கேட்ட மருத்துவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரடம் மாவட்டம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரேஷ் பரஷார்(42). மருத்துவர். அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அஷ்வினி சர்மாவின் மகன்கள் நிஷு, ராகுல் மற்றும் மாயங்க். அவர்கள் இந்திரேஷின் மகளிடம் வம்பிழுத்து வந்துள்ளனர்.
இதையடுத்து இந்திரேஷ் நேற்று சர்மாவின் வீட்டுக்கு சென்று அந்த மூவர் பற்றி அவர்களின் பெற்றோரிடம் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் 3 பேரும் நேற்று இரவு இந்திரேஷ் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பியபோது அவரை அடித்தனர். உடனே அவர் அருகில் உள்ள ஜிம்முக்குள் ஓடினார்.
அப்படியும் அந்த 3 பேர் அவரை துரத்திச் சென்று அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய இந்திரேஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து நிஷுவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.