சிறையில் ஜெயலலிதாவுக்கு மாஸ்டர் செக்-அப்: அப்பல்லோ டாக்டர் குழு நடத்தியது
பெங்களூர்: சிறையில் உள்ள ஜெயலலிதாவை பிரபல மருத்துவர்கள் அடங்கிய குழு, முழு உடல் பரிசோதனை நடத்தியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள, ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்று காலையிலேயே ஜெயலலிதாவின் ஆஸ்தான டாக்டரான சாந்தாராம், சென்னையில் இருந்து பெங்களூர் சிறைச்சாலைக்கு வந்தார். அவருடன் பெங்களூர் அப்பல்லோ மருத்துவமனையின் சீனியர் டாக்டர் குழுவும், சிறைக்கு சென்று, ஜெயலலிதாவுக்கு, பல வகையான உடல் பரிசோதனைகளை நடத்தியது.
நீரிழிவு, இதயதுடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பல வகை சோதனைகளை நடத்தி, ஜெயலலிதா ஆரோக்கியமாக இருப்பதை அந்த மருத்துவர் குழு உறுதி செய்தது. ஏற்கனவே சிறையில் அடைக்கும் முன்பாக சனிக்கிழமை மாலையில், ஒருமுறை, ஜெயலலிதாவுக்கு சிறை மருத்துவர்கள் சோதனை நடத்தியிருந்தனர். இதன்பிறகு தனியார் மருத்துவர்களை கொண்டு இன்று உடல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சலுகைகளுடன் கூடிய ஏ கிளாஸ் சிறைச்சாலையில் உள்ளதால், அவருக்கு தேவைப்பட்டால், தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.