தேர்தல் பிரசாரம்.. மோடியின் 'வலது கரம்' அமித் ஷாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித் ஷாவு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அமித் ஷா பணியாற்றி வருகிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது முசாஃபர் நகர் கலவரத்துக்கு பழிவாங்கும் வகையில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜாட் சமூகத்தினரை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அமித் ஷா பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் கொடுக்கப்பட்டது. தொடர்ந்தும் அமித் ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இந்நிலையில் அமித்ஷாவுக்கு விதிக்கப்பட்ட தடையை தேர்தல் ஆணையம் நேற்று நீக்கியது. சமூக நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் வகையில் பேசமாட்டேன் என்று அமித் ஷா, தேர்தல் ஆணையத்திடம் வாக்குறுதி கொடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.