தேர்தல் பிரசாரத்தில் வன்முறை பேச்சு: தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் குறித்து மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது அதில் கூறியிருப்பதாவது:
''சில இடங்களில் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியாத அளவிற்கு பேசிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல் அதிகாரிகள் சரிவர தலையிட்டு நடவடிக்கை எடுக்காததும், சில இடங்களில் இதன் பின்னான பணிகளை இவர்கள் தொடராததும் தலைமை தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு வந்துள்ளது.
தேர்தலை சீர்குலைக்கும் வகையில் வெறுப்பூட்டும் விதமாக பேசுபவர்கள் மீது மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவறாமல் முடுக்கிவிடவேண்டும். அரசியல் கட்சிகளின் அனைத்து தேர்தல் பிரசாரங்கள் குறித்தும் மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.
அதேபோல், பிரசாரத்தின் வீடியோ காட்சிகளை பார்த்து தேர்தல் களப் பணியாளர்கள் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறார்களா? என்பதையும் பார்க்கவேண்டும்.
இதில் எந்தவிதமான மாறுபாடும் இருக்கக் கூடாது.
கோபமூட்டும் வகையிலோ, ஆத்திரமூட்டும் வகையிலோ யாராவது பிரசாரத்தின்போது பேசினால், மாவட்ட தேர்தல் அதிகாரியும், போலீஸ் சூப்பிரண்டும் அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும்.
அதில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதன்பின்னர் அவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்து வழக்குப் பதிவு செய்வது, பொருத்தமான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கவேண்டும்.
மேலும், இது தொடர்பான தகவல்களை உடனடியாக மாநில தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும்.
அத்துடன் ஊடகங்களுக்கு இது பற்றி தேர்தல் அதிகாரிகள் பேட்டியளித்து பொதுமக்களின் கவனத்துக்கும் இதனை கொண்டு செல்லவேண்டும். ஊடகங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து செய்திகள் வெளியானால் அதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் உரிய மதிப்பளிக்கவேண்டும்.
தேர்தல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களிடம், தலைவர்களின் முழுமையான பேச்சு அடங்கிய 2 சி.டி. நகல்களை ஒப்படைப்பதை தேர்தல் களப் பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக பெறவேண்டும். இதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் அமீத்ஷா, அசாம்கான், பேனிபிரசாத் வர்மா, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா உள்ளிட்டோரின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக எழுந்த புகாரினை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.