நூறாவது நாளை நோக்கி மோடி அரசு! பொருளாதாரம் வளருவதாக சொல்கிறார் ஜெட்லி!!
டெல்லி: இந்திய பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்ல தொடங்கியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து நூறு நாட்கள் ஆகியுள்ள நிலையில், சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை இன்று டெல்லியில் நடத்தினார் ஜெட்லி. அப்போது அவர் கூறியதாவது:
30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சியின் ஆட்சி நாட்டில் அமைந்துள்ளதால் கொள்கை முடிவுகளை விரைந்து எடுக்க முடிகிறது.
விலைவாசியை குறைத்து, வளர்ச்சியை ஊக்குவிப்பதே அரசின் முதல் பணி. அரசு நடவடிக்கைகளின் பலன் சிறிது சிறிதாக தெரியவரும். அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்ல தொடங்கியுள்ளது என்பதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்து வருவது நல்ல அறிகுறியாகும். எந்த சவாலையும் முறியடிக்கும் வகையில் ராணுவம் முழு பலத்துடன் உள்ளது. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.
நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக பதவியேற்று செப்டம்பர் 5ம் தேதியன்று 100 நாட்கள் முடிந்து 101 நாட்கள் ஆகிறது. இதை முன்னிட்டு அன்று தனது அரசின் 100 நாள் சாதனை குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் கலந்துரையாட உள்ளார்.