தேர்தலில் வெற்றி யாருக்கு? கர்நாடகாவை கலக்கும் ஆடு, கோழி பெட்டிங்!!
பெங்களூர்: கிரிக்கெட் பெட்டிங் போல கர்நாடகாவில் தேர்தல் பெட்டிங் கிராமங்களில் படு ஜரூராக நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவிலுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 17ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. எடியூரப்பா, குமாரசாமி, வீரப்பமொய்லி, தரம்சிங் உட்பட 6 முன்னாள் முதல்வர்கள் போட்டியிட்டனர். நடிகை ரம்யா, நடிகர் ராஜ்குமார் மருமகள் கீதாசிவராஜ்குமார் போன்ற நட்சத்திர வேட்பாளர்களும் இதில் அடக்கம்.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில் மைசூர், ஷிமோகா மாவட்டங்களிலுள்ள கிராம மக்களிடையே தங்கள் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற பெட்டிங் ஜோராக நடக்கிறது. குறைந்தது 1000 ரூபாயில் ஆரம்பித்து அதிகபட்சம் 1 லட்சம் வரையில் பெட்டிங்கில் பணம் கட்டப்படுகிறது.
பணம் கையில் இல்லாத ஏழை விவசாயிள் தங்களிடமுள்ள ஆடு, மாடு, கோழி போன்றவற்றையும் பெட்டிங்கில் பிணைய பொருட்களாக வைக்கின்றனர். சற்று வசதி படைத்தவர்கள் வீடுகளையும் கூட இந்த பெட்டிங்கில் வைக்கிறார்கள்.
அதிகப்படியாக எடியூரப்பா மீதுதான் பெட்டிங் கட்டப்படுகிறதாம். அரசியலை விட்டே ஒதுங்கியிருந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தார் முதன்முறையாக அரசியலில் இறங்கியுள்ளனர். அதிலும் ராஜ்குமார் மருமகள் கீதா சிவராஜ்குமார் எடியூரப்பாவுக்கு எதிராக போட்டியிலுள்ளார்.
இதனால் எடியூரப்பாவா அல்லது ராஜ்குமார் குடும்பமா யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விதான் கர்நாடகாவில் அதிகப்படியான பெட்டிங்குக்கு கருப்பொருளாக உள்ளது. எந்த வகை சூதாட்டமாக இருந்தாலும் அது சட்டப்படி தவறு என்பதால் யார் பெட்டிங்கில் ஈடுபட்டாலும் அதுகுறித்து தகவல் தருமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.