பேணி பிரசாத், வினய் கட்டியாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதற்காக மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா, பாஜக தலைவர் வினய் கட்டியார் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
'நரேந்திர மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். குண்டர், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அவரது அடிமை' என அண்மையில் மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா பேசியிருந்தார். ஏற்கெனவே, பேணி பிரசாத் வர்மா மீது உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி பிரச்சார கூட்டத்தில் பேசிய பேணி பிரசாத் வர்மா, ராகுல் காந்தி பிரதமரானால் குஜராத் கலவரத்தில் ஈடுபட்டதற்காக மோடியும் அவரது நண்பர் அமித் ஷாவும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறியிருந்தார்.
இதேபோல் மோடி பிரதமரானால் முசாபர்நகர் கலவரம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு உ.பி. அமைச்சர் ஆஸாம் கான் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார் என பாஜகவின் வினய் கட்டியார் கூறியிருந்தார்.
பேணி பிரசாத், வினய் கட்டியாரின் இத்தகைய சர்ச்சை கருத்துகளுக்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.