ஓட்டுப்போட சொல்லி ஆசிரியைகளை மிரட்டிய புகார்: முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: சமாஜ்வாடி கட்சி சின்னத்துக்கு ஆசிரியைகளை ஓட்டுப்போட சொல்லி மிரட்டியதாக வந்த புகாரின்பேரில் அக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உத்தரபிரதேச மாநில அரசு ஒப்பந்த அடிப்படையில் ‘சிக்ஷா மித்ரா' ஆசிரியைகளை பணிநியமனம் செய்தது. அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள். ‘சிக்ஷா மித்ரா' திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் அக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது.
இதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இப் புகார் தொடர்பாக சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் விதி மீறல் தொடர்பான புகாருக்கு நாளை மாலைக்குள் பதில் விளக்கம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.