புதிய ”மண்டையிடி” யில் தேர்தல் ஆணையம் - மிசோரத்தில் தேர்தல் நடத்த சிக்கல்
மிசோரம்: "தேர்தலை நடத்தி பார்,வீட்டைக்கட்டிப்பார்" என்றுதான் பழமொழியை மாற்றி அமைக்க வேண்டும் போல. அந்த அளவுக்கு வீதிக்கு வீதிக்கு திடீர் திடீரென்று ஏற்படும் பிரச்சனைகளால் மண்டையை பிய்த்து கொள்கின்றது தேர்தல் ஆணையம்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் வரும் 9 ஆம் தேதி லோக்சபா தேர்தலைநடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் அங்குள்ள இளைஞர் அமைப்பினர், அரசு சாரா நிறுவனங்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் ஓட்டுப்பதிவு தினமான ஏப்ரல் 9 ஆம் தேதி 72 மணி நேர பந்த்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மலைமேல் தேர்தல்:
மிக உயர்ந்த மலைபிரதேசமான மிசோரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சென்று அங்கு தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், அங்கு தற்போது தேர்தல் நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
புரு பழங்குடியினர்:
கலவரம் காரணமாக 17 ஆண்டுகளுக்கு முன்பு மிசோராமிலிருந்து வெளியேறிய புரு பழங்குடியினர் திரிபுரா மாநிலத்திலுள்ள 6 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தபால் வாக்குபதிவு:
அவர்களில் மிசோரம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் நிவாரண முகாம்களிலிருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 1 ஆம் தேதி முதல் அங்கு தபால் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மிசோரம் அமைப்புகள் "தடா" :
ஆனால், திரிபுராவிலுள்ள நிவாரண முகாம்களிலில் தங்கவைக்கப்பட்டுள்ள "புரு" பழங்குடியினர் மிசோரம் மக்களவைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் மாநில அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்க வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுத்துள்ளன.
72 மணி நேர பந்த்:
வரும் 9 ஆம் தேதி அன்று அங்கு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் 72 மணி நேர பந்த் போராட்டத்தை நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.