தயாநிதி, கலாநிதிக்கு எதிரான வழக்கில் ஆதாரங்கள் உள்ளன: அட்டர்னி ஜெனரல் அதிரடி!
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நேற்று தெரிவித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் கோரி விண்ணப்பித்தது. அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி உரிமம் வழங்கவில்லை.
பின்னர் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது. இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார்.
(சன் டி.வி. வளர்ச்சிக்கு அடிப்படையே முறைகேடான பி.எஸ்.என்.எல். இணைப்புகள்: சக்ஸேனா வாக்குமூலம்!! )
(தயாநிதி மீதான ஏர்செல் வழக்கில் சார்ஜ் சீட்?: அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்க சொல்லும் சிபிஐ!)
ஆதாயம் அடைந்த கலாநிதி
இதனால் ஏர்செல் பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டி.டி.எச்சில் மேக்ஸிஸ் நிறுவனம் பல நூறு கோடி முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு. இதனால் தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்தார்.
இழுத்தடிப்பு
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடந்த போதும் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு நீடிக்கிறது. மேலும் மலேசியா அரசு ஆதாரங்களை தரவில்லை.. விசாரணைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றெல்லாம் கூறப்பட்டது.
சிபிஐ-ல் மோதல்
இதனால் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாத நிலை இருந்து வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது தொடர்பாக, சிபிஐ விசாரணை குழுவுக்கும் அதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஓகே சொன்ன அட்டர்னி ஜெனரல்
இதனால் இந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. தற்போது இருக்கின்ற ஆதாரங்களை வைத்தே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தயாநிதி-கலாநிதிக்கு நெருக்கடி
இந்த ஆதாரங்களை அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி இன்று அனுப்பி வைப்பார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தயாநிதி மற்றும் கலாநிதி மாறனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.