வளைகுடா நாடுகளில் இந்திய முஸ்லீம்களை இந்துக்கள் என்றுதான் அழைக்கிறார்கள் - கோவா முதல்வர் பேச்சு
பனாஜி: வளைகுடா நாடுகளுக்குப் போகும் இந்திய முஸ்லீம்களை அந்த நாட்டவர்கள் இந்துக்கள் என்றுதான் கருதுகிறார்கள் என்று கூறியுள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்.
இந்தியர்கள் என்றாலே அவர்கள் முஸ்லீம்களாகவே இருந்தாலும் கூட அவர்களை இந்துக்கள் என்று இந்தியர் அல்லாதோர் கருதுகிறார்கள் என்றும் பாரிக்கர் கூறியுள்ளார்.
இந்தியர்களை இந்துக்களாகவும், இந்தியர்களாகவும்தான் அங்குள்ளவர்கள் பார்க்கிறார்கள் என்றும் அவர் சொல்கிறார்.
கோவா சட்டசபையில் இன்று பாரிக்கர் பேசும்போது, இந்தியர் அலலாதோர் இந்தியர்களை இந்துக்கள் என்றுதான் சொல்கிறார்கள். அந்த இந்தியர் எந்த மதம் என்று பார்ப்பதில்லை. வளைகுடா நாடுகளுக்குப் போய்ப் பாருங்கள். இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீமாக இருந்தாலும் கூட அவர்களையும் இந்துக்கள் என்றுதான் அழைக்கிறார்கள் என்றார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் ராணே பேசுகையில், இந்து வேதங்களில் கூட இந்து என்ற வார்த்தை இல்லை. அப்படி ஒரு வார்த்தையே கிடையாது என்பதுதான் உண்மை. ஒரு வேளை நமது துணை முதல்வர், அப்படி ஏதாவது இருக்கலாம் என்று கருதிக் கொண்டிருக்கலாம் என்றார்.
கடந்த ஜூலை 25ம்தேதி துணை முதல்வர் பிரான்சிஸ் டிசவுசா பேசுகையில், இந்தியா ஒரு இந்து நாடு. இங்கு வசிப்பவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.