அரசு வீட்டை காலி செய்யுங்கள்: முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்
டெல்லி: டெல்லியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வீடுகளில் குடியேறிய முன்னாள் எம்.பி.க்கள் சிலர், தங்கள் பதவியை இழந்த பின்பும் காலி செய்யாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மொத்தம் 20 முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கும், 120 முன்னாள் எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டேரா போட்ட மாஜிக்கள்
தங்களின் பதவிக்காலம் முடிந்தும் அரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களை வலுக்கட்டாயகமாக வெளியேற்றும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
140 பேர் அடம்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த 20 பேர் மற்றும் 120 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு பங்களாக்களை காலி செய்யாமல் உள்ளனர்.
நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்
கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதிக்குள் அரசு பங்களாக்களை காலி செய்யும்படி மத்திய அரசு கெடு விதித்திருந்தது. ஆனால் இந்த கெடுவை நீட்டிக்கும்படி பலர் கேட்டுக்கொண்டதால், ஜூலை 26 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
காலி செய்ய உத்தரவு
இந்த காலஅவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து, அரசு பங்களாக்களைக் காலி செய்யாத முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களை வலுக்கட்டாயகமாக வெளியேற்றும்படி மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
நோட்டீஸ் அனுப்பிய அரசு
இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அவர்கள் தங்கியிருக்கும் அரசு பங்களாக்கள், வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு வாரம் கால அவகாசம்
நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற ஒரு வார காலத்திற்குள் முன்னாள் எம்.பி.க்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேறு வீட்டுக்கு மாற உத்தரவு
அமைச்சர்களாக இருந்து, தற்போது பதவியை இழந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள், பங்களா வீட்டிலிருந்து, எம்.பி.க் களுக்கு ஒதுக்கப்படும் வீட்டிற்கு மாற வேண்டும்.
சிரஞ்சீவி, ஏ.கே. ஆண்டனி
முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி குடியிருக்கும் பங்களா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிரஞ்சீவி இன்னமும் பங்களாவை காலி செய்யவில்லை.
அதேபோல அமைச்சர் பதவியை இழந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏ.கே.ஆண்டனி, ராஜீவ் சுக்லா ஆகியோர் தங்களின் பங்களா வீட்டை காலி செய்துவிட்டு, எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டிற்கு மாற வேண்டும்.
ஹோட்டல்களில் புதிய எம்.பிக்கள்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தற்போது டெல்லியில் உள்ள மாநில அரசுகளின் இல்லங்களிலும், அசோகா ஹோட்டலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.