மீசையை எடுக்க மறுப்பு... பீகாரில் முன்னாள் ராணுவ வீரரின் காதுகளை வெட்டிய கும்பல்!
பாட்னா: மீசையை எடுக்க மறுத்ததற்காக முன்னாள் ராணுவ வீரரின் காதுகள் வெட்டப்பட்ட சம்பவம் பாட்னாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவின் கவுதியா கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமானுஜ் வர்மா. இவர் கடந்த திங்கள் கிழமையன்று தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அவரை லல்கு யாதவ், பின்னா யாதவ் என்ற இரண்டு சகோதரர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும், ராமானுஜ் தனது மீசையை எடுத்துவிட வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த ராமானுஜ் அவர்களை எதிர்த்துப் போராடியுள்ளார். இதனால் மேலும் ஆவேசமடைந்த அந்தச் சகோதரர்கள் மேலும் சிலரை தங்களுக்கு ஆதரவாக அழைத்து ராமானுஜை மேலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது காதுகளையும் அவர்கள் வெட்டியுள்ளனர்.
பின்னர், ராமானுஜின் பைக்கையும் திருடிச் சென்று தலைமறைவாகினர் குற்றவாளிகள்.
இது குறித்து ராமானுஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.