மும்பை ஐஐடி இளங்கலை மாணவிக்கு பேஸ்புக்கில் ரூ. 2 கோடி சம்பளத்தில் வேலை
மும்பை: மும்பை ஐஐடியில் இளங்கலை பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை கிடைத்துள்ளது.
பேஸ்புக்கே வேலையாக இருப்பவர்கள் பலர். ஆனால் அந்த பேஸ்புக்கில் வேலை கிடைத்தால், அதிலும் ரூ. 2 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்தால் எப்படி இருக்கும்...!
மும்பையைச் சேர்ந்தவர் ஆஸ்தா அகர்வால் (20). இவர் மும்பை ஐஐடியில் கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் ஆஸ்தாவுக்கு பேஸ்புக்கில் வேலை கிடைத்துள்ளது. அதுவும் ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில்.
அஸ்தாவுக்கு இவ்வளவு சம்பளத்தில் வேலை கிடைத்த தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் அதீத மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் கம்பெனியில் டிரெயினிங் மேற்கொண்டாராம் ஆஸ்தா.
அப்போது ஒரு சாப்டவேர் உருவாக்கம் அவருக்கு புராஜெக்ட்டாக கொடுக்கப்பட்டது. அதில் அவர் திறம்பட செயலாற்றியதைப் பார்த்து வியந்த பேஸ்புக் நிர்வாகம் ஆஸ்தாவுக்கு வேலை வழங்க முடிவு செய்துள்ளது.
தனது நான்காம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்ததும் ஆஸ்தா பேஸ்புக்கில் வேலைக்கு சேர உள்ளார். அந்த நாட்களுக்காக இப்போதே காத்திருக்கத் தொடங்கியுள்ளதாக ஆர்வமுடன் கூறுகிறார் ஆஸ்தா.
இதற்கு முன்பு ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1.42 கோடி என்ற சம்பளத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.