நாக்பூர்: 7 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது
நாக்பூர்: நாக்பூரில் தனது 7 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பந்த்ராபோடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற ரவிந்திரா கோப்ரகடே (37). கடந்தாண்டு தனது மனைவியைப் பிரிந்த ரஞ்சித், இரண்டாம் வகுப்புப் படிக்கும் தனது 7 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார் அச்சிறுமி. அக்கம்பக்கத்தார் உதவியுடன் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அச்சிறுமியை சோதித்த மருத்துவர்கள், அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பின்னர், இது தொடர்பாக அச்சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தந்தையே தன்னைப் பலாத்காரம் செய்ததாக அவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஞ்சித்தின் தாயார், மகனைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் இறங்கினார். பின்னர், இது தொடர்பாக அம்பாசரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கூலித் தொழிலாளியான ரஞ்சித் மதுவுக்கு அடிமசியானவர் எனக் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது இது முதன்முறையல்ல என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது ரஞ்சித்தை கைது செய்துள்ள போலீசார், அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.