கர்நாடகா: கபினி அணையில் திடீர் விரிசல்- அச்சத்தில் பொதுமக்கள்!
மைசூர்: கர்நாடக மாநிலம், மைசூர் அருகே உள்ள கபினி அணையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபினி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்க கூடாது என்று கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கபினி அணையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
அணையில் தண்ணீர் திறக்கப்படும் மதகுகள் அருகில் உள்ள சுற்று சுவர் அருகே விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அணையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்ய பொறியாளர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இதனிடையே, அணையை சரியாக பராமரிக்காததே விரிசலுக்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து மூத்த பொறியாளர் ரகுபதி கூறுகையில், "அணைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அணையின் கட்டமைப்பு உறுதிப்பாட்டிற்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அணை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது. எனவே அணை அருகே வாழும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்தார்.