5வது கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகம் உள்பட 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!!
டெல்லி: லோக்சபா தேர்தலின் 5வது கட்டமாக நாளை 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.
நாட்டின் 16வது லோக்சபாவுக்கான தேர்தல் ஏப்ரல் 7ந் தேதி முதல் மே 12ந் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரையில் 4 கட்டங்களாக நடந்த தேர்தலில் 112 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 431 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
121 தொகுதிகளில்..
5வது கட்ட தேர்தல் நாளை காலை 121 தொகுதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில் இத்தொகுதிகள் உள்ளன.
எந்தெந்த மாநிலங்களில்?
அசாமில் 6 தொகுதிகளிலும் பீகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 7 தொகுதிகளிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், ஜார்கண்டில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும், ஒடிசாவில் 11 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 20 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பிரசாரம் ஓய்வு
இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தனர். பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், மூத்த தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தனர்.
1,739 வேட்பாளர்கள்
இத்தொகுதிகளில் மொத்தம் 1,769 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவற்றில் காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், பாஜ 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
16.61 கோடி வாக்காளர்..
நாளைய தேர்தலில் மொத்தம் 16.61 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
நிலகேனி, மேனகா காந்தி..
நாளை தேர்தலை சந்திக்கும் தலைவர்களில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், நந்தன் நிலகேனி, மேனகா காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, சரத்பவார் மகள் சுப்ரியா சுலு ஆகியோர் முக்கியமானவர்கள்.
வாக்குப் பதிவு நேரம்
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இத்தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் மத்திய படைகள் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு பதிவை அமைதியாக நடத்த தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.