‘நமோ’னு பேர் வச்சதால இது மோடியின் சுயசரிதை அல்ல...: இயக்குநர் ருபேஷ் பால் விளக்கம்
மும்பை: பாஜகவின் பிரதம வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயரில் உள்ள இரு எழுத்துக்களை கொண்டு தான் இயக்க இருக்கும் படமான ‘நமோ' மோடியின் சுயசரிதைப்படம் அல்ல, மேலும் அப்படத்துக்காக எந்தவொரு அரசியல் கட்சியினரும் தனக்கு நிதியுதவி அளிக்கவில்லை' என விளக்கமளித்துள்ளார் அப்படத்தின் இயக்குநரான ருபேஷ் பால்.
இந்தியில் பிரபல இயக்குனர் ருபேஷ் பால். இவர் தனது அடுத்தப் படத்திற்கு ‘நமோ' எனப் பெயரிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ‘நமோ' திரைப்படத்தில் குஜராத் முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுவதாக தகவல் வெளியானது.
ஆனால், அத்தகவலை மறுத்துள்ளார் இயக்குநர் ருபேஷ். இது குறித்து நேற்று மும்பையில் அவர் கூறியதாவது:-
தவறான தகவல்....
நரேந்திர மோடியின் பெயரில் உள்ள 2 எழுத்துக்களை (ந.மோ) கொண்டு படத்தின் பெயர் ஆரம்பிப்பதால், இந்த படம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. அது முற்றிலும் தவறானது. இந்த படத்துக்காக எந்தவொரு அரசியல் கட்சியினரும் நிதியுதவி அளிக்கவில்லை.
சில சம்பவங்கள் மட்டும்....
இந்த படத்தில் நரேந்திர மோடியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. இது ஒரு அரசியல் சிலிர்ப்பூட்டுகிற படம். இதில் மோடியின் சுயசரிதை பற்றி குறிப்பிடவில்லை.
சவாலான விஷயம்....
சமூகத்தில் எதிர்ப்பும், ஆதரவும் கொண்ட ஒரு தனிநபரை முன்னிலப்படுத்தி படம் எடுப்பது என்பது உண்மையிலேயே சவால் நிறைந்த விஷயம். என்னுடைய பங்களிப்புகளில் சிறு தவறுகள் ஏற்படுவதை கூட நான் விரும்பமாட்டேன்.
மோடியை சந்திக்க உடன்பாடில்லை....
இந்த படத்தை பார்த்து நரேந்திர மோடியின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பெருமையாக பேசுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தை இயக்குவது தொடர்பாக நான் அவரை (நரேந்திர மோடியை) சந்தித்து பேசவில்லை. ஆனாலும், இணை இயக்குனர் மிதேஷ் பட்டேல் மோடியை நேரில் சந்தித்தார். மோடியை சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
கட்டுக்கதைகள்....
நீதியை அடிப்படையாக கொண்ட கதையம்சங்களையே நான் விரும்புகிறேன். நான் மோடியை சந்தித்து பேசினால், அவரது சுயசரிதையை படத்தில் புகுத்திவிட்டதாக கட்டுக்கதைகளை கிளப்பி விடுவார்கள் என்ற அச்ச உணர்வு எனக்கு இருக்கிறது.
மே மாதம் ரிலீஸ்....
இந்த படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. மும்பை மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். படப்பிடிப்பு முடிந்ததும் வருகிற மே மாதம் படம் திரைக்கு வரும்' என இவ்வாறு ருபேஷ் பால் தெரிவித்துள்ளார்.