கொல்கத்தா: 21 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: நால்வர் படுகாயம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சட்டர்ஜி சர்வதேச கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் 12 மற்றும் 15-வது மாடிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 20 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், 2 மின் ஏணிகள் கொண்டு கட்டடத்தில் பயணியாற்றிய ஊழியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்காண காரணம் இதுவரை தெரியவில்லை.
கொல்கத்தாவில் உள்ள சட்டர்ஜி சர்வதேச மைய கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 12-வது மாடியில் பிடித்த தீ மளமளவென 15-வது மாடி வரை பரவியதால் அங்கு கடும் புகை எழுந்தது. அந்த தளங்களில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள், 20 வாகனங்களில் சென்று தீயை அணைக்க போராடினர். அதேசமயம் அந்த கட்டிடத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
பொதுமக்கள் மீட்பு
இந்த தீ விபத்து பற்றி கூறிய, மேற்கு வங்க தீயணைப்புத்துறை மந்திரி ஜாவேத் கான், "தீப்பிடித்த தளத்தில் சிக்கிய 4 பேர் புகையில் சிக்கியதால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஏணி மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இனி கட்டிடத்திற்குள் ஒருவரும் சிக்கியிருக்கவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் உள்ள சிலரும் மீட்கப்பட்டனர்." என்றார்.
கரும்புகையுடன் தீ
இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பிய சுமித்ரா என்ற பெண், "சாட்டர்ஜி கட்டிடத்தின் 8-வது மாடியில் நான் வேலை பார்க்கிறேன். காலை 8.30 மணியளவில் மேல் தளங்களில் இருந்து சத்தம் கேட்டது. படிக்கட்டுகள் மூலம் மேலே ஏறி நானும் சில ஊழியர்களும் பார்த்தபோது, 12-வது மாடியில் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தோம். அங்கு சிக்கியிருந்த சிலர் அழும் குரல் கேட்டது. ஆனால், எங்களால் அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை.
மரணத்தின் பிடியில்
உடனடியாக நாங்கள் கீழே இறங்கியதால் உயிர் தப்பினோம். மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்த இந்த சம்பவம் என் நினைவை விட்டு எப்போதும் நீங்காது" என்றார்.
விலகாத அதிர்ச்சி
அருணிமா என்பவர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளார். "தீப்பிடித்தது தெரியாமல் 3-வது மாடியில் உள்ள எனது அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென தொலைக்காட்சி சேனல்களில் காட்சிகள் தெரியாமல் அலை அலையாக தெரிந்தது. இதனால் நாங்கள் வெளியில் எட்டிப் பார்த்தபோது மேல்தளத்தில் தீப்பிடித்ததை பார்த்தோம். பயந்துபோன நாங்கள் உடனடியாக கீழே இறங்கிவிட்டோம்" என்று நடுக்கத்துடன் கூறியுள்ளார்.