மோடியின் மூன்று மாதகால ஆட்சி ஏமாற்றமளிக்கிறது: மாயாவதி தாக்கு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதல் மூன்று மாத ஆட்சி காலம் ஏமாற்றம் அளிப்பதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, "புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் மூன்று மாத ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது.
மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. மோடி அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. மோடியின் ரசிகர்களுக்கே அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியல் சாசனத்தால் உருவாக்கப்படாத ஆனால் ஒரு அதிகாரம்மிக்க அமைப்பாக உருமாறியுள்ளது. எந்த நேரத்திலும் நாட்டில் மத பிரச்சினையை ஏற்படுத்த அந்த அமைப்பு தயாராக உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ஆர்எஸ்எஸ் அபிமானிகள் இந்து நாடு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். ிவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.