டெல்லி திகார் சிறையில் 2 வாரத்தில் 5 கைதிகள் மர்மச்சாவு
டெல்லி: டெல்லி திகார் சிறையில் கடந்த இரு வாரங்களில் 5 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து உயர்மட்ட விசாணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிறைகளில் தலைநகர் டெல்லியில் உள்ள திகார் சிறையும் முக்கியமானது. இங்கு பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் தலைவர்கள் என பலர்சிறை தண்டனை அனுபவித்துள்ளனர்.
பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட இச்சிறையில் கடந்த இரு வாரங்களில் 5 விசாரணை கைதிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று ரிங்கு ஜுனேஜா (27) இளைஞர் வழக்கு விசாரணைக்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாமின் பெற்ற அவர் சிறையில் இருந்து வெளியே வரும்முன்னரே நேற்று காலை 8மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இருவாரங்களில் 5 பேர் மரணம்
இது போன்று கடந்த இரு வாரங்களில் இதுவரை 5 பேர் மர்மமானமுறையில் இறந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை சிறைத்துறை மறுத்து வருகிறது. சிறைத்துறை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக இது போன்று இறப்புகள் ஏறபடுகின்றனவா, அல்லது கைதிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உயர்மட்ட குழு விசாரணை
இது குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி அலோக் வர்மா கூறுகையில், கைதிகள் இறப்பதற்கு உண்மையான காரணம் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
சாவில் மர்மம்
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சிறைநிர்வாகம் எதையோ மறைக்கிறது. கைதிகள் சாவில் மர்மம் உள்ளது என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விசாரணை கைதிகள் மர்மமான முறையில் இறந்து போவது சக கைதிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.