பட்ஜெட்டுக்கு நடுவே 5 நிமிடம் 'பிரேக்', உட்கார்ந்து கொண்டு வாசிப்பு- ஜேட்லி புதுமை
டெல்லி: பட்ஜெட் உரைக்கு ஐந்து நிமிடம் பிரேக் எடுத்துக்கொண்டதுடன், உட்கார்ந்த படி உரையை படித்தார் அருண் ஜெட்லி. இந்த வகையில் புதிய சாதனை படைத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் தற்போது 16 வது நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்ற ஆரம்பித்தார். நின்று கொண்டே உரையாற்றிய அருண்ஜெட்லிக்கு உடல் சோர்வுற்றது. இதையடுத்து கொஞ்ச நேரம் பிரேக் எடுத்துக்கொள்ளட்டுமா என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பார்த்து ஜெட்லி கேட்க, அதற்கு அவரும் ஓ.கே. சொல்லி அவையை ஐந்து நிமிடம் ஒத்தி வைத்தார்.
11.45 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்ட அவை மீண்டும் 11.50க்கு தொடங்கியது. இதன்பிறகு நின்று கொண்டே பட்ஜெட் உரையை படிக்க முடியாமல் அமர்ந்தபடி படிக்க ஆரம்பித்தார் ஜெட்லி. நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பட்ஜெட் உரை பாதியில் நிறுத்தப்பட்டு பிரேக் எடுக்கப்பட்டது இதுதான் முதன்முறை. அதேபோல அமர்ந்தபடி உரையை வாசித்ததும் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஜெட்லி புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
இருப்பினும் பட்ஜெட் உரையை பாதியில் நிறுத்தியது, பலரையும் ஆச்சரியமூட்டியது. ஜெட்லியைவிட முதிய வயதினர் நிதி அமைச்சராக இருந்தபோதெல்லாம் இப்படி செய்ததில்லை என்ற கிசுகிசுக்கள் நாடாளுமன்றத்திற்குள் எதிரொலித்தன.