குற்றவாளிகளை விட்டுவிட்டு அமைச்சரின் நாயை தேடி அலைந்த ராஜஸ்தான் போலீஸ்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர ரத்தோரின் நாய்க்குட்டி காணாமல் போனதால் போலீசார் அதை தேடி 2 நாட்களாக தெருத் தெருவாக அலைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோரின் 5 மாத நாய்க்குட்டியான சார்லி கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போனது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உடனே போலீசார் நாய்க்குட்டி சார்லியை ஞாயிற்றுக்கிழமையும், இன்றும் தெருத் தெருவாக தேடி அலைந்தனர்.
இந்நிலையில் உள்ளூர்காரர் ஒருவர் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றபோது சாலையில் ஓடிய நாய்க்குட்டியை தூக்கி வந்து அமைச்சரின் பங்களாவில் கொடுத்தார்.
இது குறித்து காங்கிரஸார் கூறுகையில்,
கடந்த வெள்ளிக்கிழமை ஜெய்பூரில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரின் வீடு கொள்ளை போயுள்ளது. மேலும் சனிக்கிழமை கொள்ளையர்கள் பூட்டிக் கிடந்த வீட்டில் கைவரிசையை காட்டியுள்ளனர். அதை எல்லாம் கவனிக்காமல் போலீசார் நாய்க்குட்டியை தேடி அலைந்துள்ளனர். இது வெட்கக் கேடானது என்று தெரிவித்துள்ளனர்.
நாய்க்குட்டியை கண்டெடுத்தவர் முதலில் அதை விலங்குகள் இல்லத்தில் விட முடிவு செய்தாராம். பின்னர் செய்தித்தாள்களில் சார்லியை காணவில்லை என்று வந்த விளம்பரத்தை பார்த்து அதை அமைச்சரின் வீட்டில் கொண்டு போய் விட்டாராம்.