ரம்ஜான் நோன்பு இருந்தவருக்கு சப்பாத்தி திணித்த எம்பிக்கள் பதவியை பறிக்க மனு! தள்ளுபடி செய்தகோர்ட்
டெல்லி: டெல்லியில் மராட்டிய பவன் செயல்பட்டு வருகிறது. இங்கு மகாராஷ்டிரா மாநில எம்.பிக்களுக்கு சாப்பாடு சப்ளை செய்வது வழக்கம். இந்திய ரயில்வேயின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி சாப்பாடு சப்ளை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில், ஜூலை 17ம் தேதி, சிவசேனை கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே உட்பட 11 எம்.பிக்கள் சாப்பிடுவதற்காக மராட்டிய பவன் சென்றனர்.
அங்கு பரிமாறப்பட்ட உணவு தரம் குறைந்ததாக இருந்துள்ளது. குறிப்பாக சப்பாத்தி, பிய்த்து வாயில் வைக்க முடியாத அளவுக்கு கடினமானதாக இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த ராஜன் விச்சாரே உள்ளிட்ட 11 எம்.பிக்கள் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
வாயில் திணிப்பு
அங்கு கேட்டரிங் சூப்பர்வைசராக பணியாற்றும் அர்ஷத் என்ற இஸ்லாமியரிடம் சென்ற ராஜன் விச்சாரே, ஒரு சப்பாத்தியை பிய்த்து, 'இதை எங்களுக்கு அளித்துள்ளீர்களே, நீங்கள் சாப்பிடுவீர்களா' என்று வாய்க்குள் திணிக்க முற்பட்டார். அப்போது அர்ஷத், அந்த எம்.பி கையை தட்டிவிட்டார். அருகில் இருந்த மற்ற ஊழியர்கள், அர்ஷத் ஒரு முஸ்லிம், அவர் ரம்ஜான் நோன்பு இருக்கிறார் என்று கூறியுள்ளனர். பிறகு எம்.பி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஊழியர் புகார்
இந்நிலையில், மகாராஷ்டிரா பவனின், ரெசிடென்ட் கமிஷனருக்கு அர்ஷத் இந்த விவகாரத்தை புகாராக எழுதியிருந்தார். அந்த புகாரில் "இதை பார்த்தால் நான் இஸ்லாமியர் என்பது எம்.பி.க்கு தெரிந்திருக்கும். அப்படியிருந்தும், ரம்ஜான் நோன்பு இருக்கும் நேரத்தில் அதை முறிக்கும் வகையில் எனது வாயில் சப்பாத்தியை எம்.பி திணித்தது, மனவேதனையை உண்டாக்கியுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
தெரியாமல் நடந்தது
இதனிடையே ராஜன் விச்சாரே கூறுகையில், "ஐஆர்சிடிசி அளித்த உணவு தரமில்லாமல் இருந்தது. எனவேதான், அதுகுறித்து தட்டிக்கேட்க சமையலறைக்கு சென்று சூப்ரவைசரிடம் சண்டை போட்டேன். மத உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் கிடையாது" என்று தெரிவித்தார்.
பொது நல வழக்கு
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து டெல்லி ஹைகோர்ட்டில் மவுலானா அன்சர் ராஜா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்திற்காக 11 எம்.பிக்களின் பதவிகளையும் பறிக்க லோக்சபா சபாநாயகருக்கு ஹைகோர்ட் சிபாரிசு செய்ய வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
மனு தள்ளுபடி
இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஜி.ரோகிணி மற்றும் ஜெயந்த் நாத் அடங்கிய அமர்வு, மனுதாரர் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததை சுட்டிக் காட்டி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையில் புகார் அளிக்காமல் இருப்பதையும் கோர்ட் சுட்டிக்காண்பித்தது.