ஒரு சப்பாத்திக்கு போரா... பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது: சிவசேனை எம்.பி
டெல்லி: மகாராஷ்டிரா பவனில் நடந்தது சப்பாத்தி பிரச்சினைதானே தவிர மீடியாக்கள் உருவாக்கியுள்ளதை போல மத பிரச்சினை கிடையாது என்று சிவசேனை கட்சியின் தானே தொகுதி எம்பி ராஜன் விச்சாரே தெரிவித்தார். இவர்தான் சப்பாத்தியை வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இதுகுறித்து ராஜன் விச்சாரே கூறியதாவது: மகாராஷ்டிரா பவனில் தண்ணீர், சாப்பாடு சரியாக வினியோகிக்கப்படுவதில்லை. இந்திய ரயில்வே துறை அளிக்கும் உணவில் தரம் இல்லை. எங்கள் எம்.பிக்களுக்கு அளித்த சப்பாத்தி மிகவும் கடினமாக இருந்தது. அதை கைகளால் கூட பிய்க்க முடியவில்லை. மீடியாக்களை கூப்பிட்டு சப்பாத்தியை இழுத்து காண்பித்து அவலத்தை உணர்த்தினர் எங்கள் கட்சி எம்.பிக்கள்.
இதைத்தொடர்ந்துதான் ரயில் கேட்டரிங் சூப்பர்வைசரை கண்டிக்க மீடியாக்களுடன் சமையலறைக்குள் நுழைந்தோம். சூப்பர்வைசரிடம் சப்பாத்தியை காண்பித்து இதை நீங்கள் சாப்பிடுவீர்களா என்று கேட்டதோடு அவரது வாயருகில் அதை நீட்டி ஆவேசமாக கேட்டேன்.
ஒருவாரம் கடந்துவிட்ட நிலையில் திடீரென, அந்த ஊழியர் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, சிவசேனை வேண்டுமென்றே தகராறு செய்ததாக புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. சப்பாத்திக்காக தகராறு நடந்தபோது, சூப்பர்வைசர் என்ன மதத்துக்காரர் என்பது எங்களுக்கு தெரியாது. அவரது சட்டையில் இருந்த பேட்ஜில் நான் பெயரை பார்க்கவில்லை. அவர் தோற்றத்திலும் இஸ்லாமியரைப்போல காணப்படவில்லை.
இஃப்தார் நோன்பு திறப்புக்கு எங்கள் கட்சிக்காரர்கள் செல்வது வழக்கம். எங்களுக்கு இஸ்லாமியர்கள் வாக்களித்துள்ளனர். எனவே எந்த மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் தேவை எங்களுக்கு கிடையாது. சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு, காட்சி மீடியாக்கள் சுவாரசியத்துக்காக, மதத்தை இழுத்துவிட்டு நாட்டில் அமைதியை கெடுக்க முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஒரு சப்பாத்தியை வைத்துக் கொண்டு அர்ணாப் கோஸ்வாமி முதலிய புத்தி ஜீவிகள் இன்னும் பல நாட்களுக்கு தொலைக்காட்சிகளை அல்லோகலப்படுத்திவிடுவார்கள் பாருங்களேன்...